தென்னிலங்கையில் வர்த்தகர்களை இலக்கு வைத்து தொடரும் மோசடி!

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எனக்கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி  இடம்பெற்று வருவதாக  இலங்கை  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு வர்த்தகர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தல்

மேலும், நட்சத்திர ஹோட்டல்களுக்கும் அழைப்பினை ஏற்படுத்தி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் போல் நடித்து பணம் கேட்பதாகவும், சில தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்குகள் அதிகளவில் குவிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக பொலிஸ் நிலையங்களில் ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளதுடன், இதுபோன்ற அழைப்புகள் வந்தால் அதனை  தவிர்த்து, அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.