மே தினக் கூட்டத்தால் குவிந்த குப்பை!

நேற்று (01) இடம்பெற்ற மே தின பேரணியின் பின்னர், இன்று (02) காலை வரை அப்பகுதிகளில் பெருமளவான குப்பைகள் குவிந்து கிடந்தன.

இன்று காலை முதல் நகர சபை ஊழியர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக எமது  செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகள், கொழும்பு நகரை மையப்படுத்தி பல மே தின பேரணிகளை பிரதான கட்சிகள் நேற்று நடத்தியிருந்தன.

இந்நிலையில் மே தி பேரணிகள் முடிவடைந்த பின்னர் கொழும்பில் சில இடங்களில் இவ்வாறு குப்பைகள் குவிந்து கிடந்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினப் பேரணியின் பின்னர், கட்சியின் ஆதரவாளர்கள் பொரளையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில்  குப்பைகளை வீசி சென்றுள்ளமை காணமுடிந்தது.

இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்கள் அந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஹைட் பார்க் பகுதியில் நடைபெற்ற முன்னிலை சோசலிச கட்சியின் மே தின பேரணியின் பின்னர் அவர்கள் குப்பைகளை சுத்தம் செய்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் பின்னர் அந்தப் பகுதியில் அதிகளவு குப்பைகள் குவிந்திருந்தன.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின பேரணி இடம்பெற்ற கொழும்பு ஏ.இ.குணசிங்க விளையாட்டு மைதானம் இன்று காலை நகர சபை ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டது.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் பிரதான மே தின பேரணி கொழும்பு தாமரை தடாக சுற்றுவட்டத்தில் இடம்பெற்றதுடன் பேரணியின் பின்னர் துப்புரவு செய்யும் பணிகளை அவர்களே செய்திருந்தனர்.

அதேநேரம் பாராளுமன்ற வாகன நிறுத்துமிடத்திலும் குப்பைகள் தேங்கி காணப்பட்டன.