அமெரிக்க கார் விபத்தில் மூவர் பலி!

அமெரிக்காவின் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜியா மாகாணம் அல்பாரெட்டா பகுதியில் நடந்த கார் விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தின்போது காரில் இருந்த ரித்வாக் சோமேபல்லி மற்றும் முகமது லியாகாத், அன்வி சர்மா ஆகிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அன்வி சர்மா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஷ்ரியா அவர்சாலா மற்றும் அன்வி சர்மா ஆகிய இருவரும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வந்ததாகவும், ஆர்யன் ஷர்மா அங்குள்ள ஆல்பாரெட்டா உயர்நிலைப் பாடசாலையில் படித்து வந்ததாகவும், அவர் இந்த பாடசாலையின் கிரிக்கெட் அணியிலும் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி, அமெரிக்காவில் நடந்த பயங்கர கார் விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர் என்பதும் அதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி அரிசோனாவில் உள்ள லேக் பிளசன்ட் அருகே நேருக்குநேர் கார்கள் மோதிய விபத்தில், தெலங்கானாவைச் சேர்ந்த நிவேஷ் முக்கா மற்றும் கௌதம் பார்சி ஆகியோர் உயிரிழந்திருந்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது