காதலுறவை கண்டித்த தாய் விபரீத முடிவெடுத்த மகள்!

மட்டக்களப்பு – வெல்லாவெளியில் காதல் தொடர்பை நிறுத்த கூறியதால் அலரி விதையை உட்கொண்ட யுவதி சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க மகேந்திரன் புவிதா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை (30) இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த யுவதி நேற்று (31) உயிரிழந்துள்ளார்.

அலரி விதையை உட்கொண்ட யுவதி
மண்டூர் தெற்கு பகுதியில் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்த நிலையில் , யுவதி 2 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்

தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைய யுவதியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், யுவதி இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்ததை அறிந்த தாயார் யுவதியை கண்டித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி சென்ற யுவதி மீண்டும் 15 நிமிடங்களில் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டினை சுத்தம் செய்த பின்னர் தனது தாயாருடன் சிறிது உரையாடிய பின்னர், தான் அலரி விதை உட்கொண்டு விட்டதாக தெரிவித்தனை அடுத்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.