கனேடியரிடம் பண மோசடியில் ஈடுபட்ட யாழ் போலி வைத்தியர் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள்!

கனேடியர் ஒருவரிடம் பல இலட்ச ரூபாய் மோசடியில் செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்பபாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்தி , அதற்கான போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து பல இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கைது நடவடிக்கை
குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளமையுடன் வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளை பேணி அவர்களை மிரட்டி , பல இலட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்.

அத்துடன், இளைஞனிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் காணொளிகள் உள்ளதாகவும் காவல்துறை விசரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த இளைஞனை நேற்றுமுன்தினம் (03) யாழ்.நகர் பகுதியில் அதிசொகுசு காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை காவல்துறையினர் இடைமறித்து கைது செய்தனர்.

நீதிமன்ற உத்தரவு
இதனைதொடர்ந்து, இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல போலி உறுதி முடிப்புக்கள் , காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்பு பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதன் படி, நேற்றைய தினம் (04) கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை மன்று இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது