பிரேசில் விமான விபத்தில் இருவர் பலி!

  பிரேசில் நாட்டின் சான்டா கேட்டரினா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், நேற்று முன்தினம் மாலை மினாஸ் ஜெராயிஸ் மாநிலம் கவர்னடார் வாலடேர்ஸ் நகரில் இருந்து சான்டா கேட்டரினா தலைநகர் புளோரியானோபொலிஸ் நகர் நோக்கி சென்றது.

இடாபோவா நகரின் அருகில் சென்றபோது, விமானத்தை அவசரமாக தரையிறக்க ஜாயின்வில்லி விமான நிலையத்துடன் விமானி தொடர்பு கொண்டதாக கூறப்படுகின்றது.

விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தபோது, விமான நிலையத்தை தாண்டி மரங்கள் அடர்ந்த பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

ஜாயின்வில்லி விமான நிலையத்துடன் விமானி தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க முயற்சித்தது ஏன்? என்பது குறித்து விமானப்படை விசாரித்து வருகிறது.