நான்கு வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை மீது சிறையில் சக கைதிகள் தாக்குதல்!

நான்கு வயது சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது சிறுமியின் தந்தை ஒருவர் சக கைதிகள் குழுவினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணை
அதாவது சிறுமியை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபருக்கு எதிராக பலத்த கண்டனமும் எதிர்ப்புகளும் வெளியாகின

மேலும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இரு பெண்களும், பிரதான சந்தேகபரும் கைது செய்யப்பட்டனர்.

மணலாறு பொலிஸார் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் மற்றும் முல்லைத்தீவு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சிறுமியைத் தாக்கிய குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில்
45 வயதான பிரதான சந்தேகநபரும், 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கடந்த ஐந்தாம் திகதி இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதவிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை அதே சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகள் சிலர் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.