யாழ் மைதானம் ஒன்றில் வன்முறைக் கும்பல் அராஜகம்!

யாழில் மைதானத்திற்குள் அத்துமீறி புகுந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில, இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம் (16-06-2024) கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மீசாலை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞவே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட 12 பேரை கொண்ட வன்முறை கும்பலில் 4 பேரை ஊர் மக்கள் மடக்கி பிடித்து, நையப்புடைத்து, மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்துள்ளனர்.

பின்னர் கொடிகாமம் பொலிஸார் தாக்குதலாளிகளை ஊர் மக்களிடமிருந்து மீட்டு கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொடிகாமம் பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகம் ஒன்றினால் கரப்பந்தாட்ட சுற்று போட்டி ஒன்று நடத்தப்பட்டு வந்த நிலையில், அதன் இறுதி போட்டி நேற்று நடைபெறவிருந்தது.

அதற்கான ஏற்பாடுகளை கழக உறுப்பினர்கள், தமது மைதானத்தில் செய்து கொண்டிருந்த வேளை 12 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று, மைதானத்திற்குள் கூரிய ஆயுதங்களுடன் நுழைந்து, போட்டி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது.

அதன்போது இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், ஊரவர்கள் ஒன்று திரண்டு தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முயன்ற போது, அனைவரும் தப்பியோடியுள்ளனர்.

அவர்களை துரத்தி சென்று, நான்கு பேரை மடக்கி பிடித்து நையப்புடைந்த பின்னர் மின் கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த கொடிகாம பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த நால்வரையும் மீட்டு, அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

ஏனைய தாக்குதலாளிகளையும் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கைதானவர்களை இன்றையதினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.