சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட தாயும் ​சேயும் மரணம்!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (வயது 36) திடீரென இறந்துள்ள சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றுக்காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், தகவலறிந்து அவ்வீட்டுக்குச் சென்ற பொலிஸார், வீட்டிலிருந்த இரத்தகரைபடிந்த ஆடைகள் சிலவற்றையும் மீட்டுள்ளனர். அத்துடன் கூட்யொன்றுக்குள் இருந்து சுமார் 7 மாதங்கள் மட்டுமே மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டுக்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கருக்கலைப்பு காரணமாகவே, இவ்விரு உயிரிழப்புகளும் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார், மரணமடைந்த பெண்ணுடன் அடிக்கடி தொடர்பை பேணிவந்த 35 வயதான பெண்​ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

தடயவியல் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம், டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவுள்ளது.