அவருடன் தாய், தந்தை எவருமே வருகைதரவில்லை. எமது வீட்டில் அவருக்கு பிரத்தியேக அறை ஒன்று வழங்கினோம் – ஹிசாலினியின் மரணம் குறித்து ரிசாட்

தமது வீட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முதல் தடவையாக இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.

மேலும் அதில் அவர் தெரிவித்ததாவது, ஹிஷாலினி எமது வீட்டுக்கு வருகை தரும்போது 16 வயது பூர்த்தியானவராகவே இருந்தார்.

அத்தோடு அவருடன், தாய், தந்தை எவருமே வருகைதரவில்லை. எமது வீட்டில் அவருக்கு பிரத்தியேக அறை ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

மேலும் இச் சம்பவ தினத்தன்று காலை 6.45 மணியளவில் ஹிஷாலினியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு, வீட்டில் இருந்த எனது மனைவி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் அவரை காப்பற்ற முயன்றதுடன், பின்னர் காலை 7.33 மணிக்கு சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தீயை அணைக்க முயற்சிப்பதற்காகவும், அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளும் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

எனினும், ஹிஷாலினி காலை 8.45 மணிக்கே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹிசாலினிக்கு ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்வதற்காக 7 – 10 இலட்சம் வரை செலவாகுமென வைத்தியர்கள் தெரிவித்ததாகவும், அதனை வழங்க தமது வீட்டார் தயாராக இருந்ததாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

எனினும், சில தரப்பினர் சிறுமியின் மரணம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தாம் ஹிஷாலினியை ஒரு பணிப்பெண்ணை போன்று கருதவில்லையென்றும் தெரிவித்தார்.