நாட்டை மிரட்டும் மற்றுமொரு சரும நோய்!

இலங்கையில், கொரோனா தொற்றை அடுத்து மக்களை மற்றுமொரு நோய் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, டீனியா என்கிற ஒருவித பூஞ்சை நோயே இலங்கை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பூஞ்சையால் ஏற்படும் டீனியா எனும் சரும நோய்க்கும் கொவிட் தொற்றுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சரும நோய் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மனிதர்கள் மற்றும் விலங்குகள் மூலமும், மண்ணில் உள்ள விசேட பூஞ்சை ஒன்றின் ஊடாகவும் இந்த தொற்று பரவலடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நகம், தலைமுடி மற்றும் தோலின் வெளிப்புறம் போன்ற இடங்களில் இது வளர்ச்சி அடைவதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றுக்கு தோல் அரித்தல், சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதுடன், உடலில் அதிகம் வியர்க்கும் பகுதிகளில் இது அதிகமாக பரவும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சருமத்தை தூய்மையாக வைத்திருத்தல், மற்றவர்களின் ஆடைகளை பயன்படுத்தாமல் இருத்தல், தளர்ந்த ஆடைகளை பயன்படுத்தல் போன்றவற்றின் மூலம் இந்த சரும நோய் ஏற்படுவதை தடுக்க முடியும் என விசேட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,இந்த நோயை சிகிச்சைகள் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதுடன், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனேயே வைத்தியரை அணுகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.