யாழில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களிலும் ஒரு இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 50 ஆயிரம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது 3 ஆம் கட்டமாக 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.