இலங்கையில் பிசிஆர் பரிசோதனை செய்யும் நிலையமொன்றில் நேர்ந்த சம்பவம்!

இலங்கையில் பிசிஆர் பரிசோதனை செய்யும் நிலையமொன்றில் மழையில் நனைந்தபடி நபரொருவர் வலிப்பினால் பாதிக்கப்பட்டு நிலத்தில் விழுந்து அவதியுறும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த நபர் கீழே விழுந்து வலிப்பினால் அவதிப்படும் நிலையில் அதனை காணொளியாக பதிவு செய்த போதும் கூட பாதிக்கப்பட்ட நபரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, குறைந்தபட்சம் அவர் அருகில் செல்வதற்கோ கூட மக்கள் தயங்குகின்றமையும், மருத்துவர் அல்லது தாதியொருவரை வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

எனினும் அவர்கள் முயற்சி மேற்கொள்ளும் வேளையில் நிலத்தில் விழுந்தபடி மழையில் நனைந்தவாறு குறித்த நபர் போராடும் நிலையே அங்கு காணப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அச்சம் காரணமாக பொது இடங்களில் இவ்வாறான நிலைக்கு உள்ளாகும் நபர்களுக்கு உதவி செய்வதற்கு அச்சப்படும் நிலை தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது.

கோவிட் தொற்று நிலை நாட்டில் நிலவுகின்ற போதும் ஒரு மனித உயிர் ஆபத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஓடி சென்று உதவும் மனிதம் நாட்டில் மரித்து வருகிறதா என சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.