மீண்டும் எரிவாயுவின் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ள லிட்ரோ நிறுவனம்!

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் தமது நிறுவனம் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சமையல் எரிவாயுவிற்கான விலையை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை. சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தற்போது அதிகாரம் கிடையாது.

விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவையே வழங்க வேண்டும். அதற்கான கோரிக்கையை நிதி அமைச்சின் ஊடாக அமைச்சரவைக்கு சமர்பித்துள்ளதாகவும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க கூறுகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

அத்துடன் இந்தியாவின் கடன் உதவியால் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் பிரச்சினைகளை இல்லாமல் செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதன்போத அமைச்சர் பந்துல குணவர்தன கருத்துரைக்கையில்,இலங்கை எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடியிலிருந்து மீள்வது தொடர்பில் சர்வதேச பொருளாதார நிபுணர் ஒருவரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.