யாழில் பிரதேச செயலக பெண் ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த மர்ம நபர்கள்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் கத்தி முனையில் சந்தேக நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தரான குறித்த பெண் வியாழக்கிழமை மாலை பிரதேச செயலகத்தில் பணியை முடித்துக் கொண்டு தனது வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.

வீதியோரம் நின்றிருந்த கொள்ளையர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து நகை மற்றும் கைப்பையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கைப்பைக்குள் ஒரு தொகை பணம், ஆவணங்கள் மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.