யாழில் சீல் வைக்கப்பட்ட மூன்று உணவகங்கள்!

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களுக்கு திருத்த வேலைகளுக்கான அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருத்த வேலைகள் பூர்த்தியானமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் மீள் பரிசோதனை கடந்த 25.04.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொள்ளாது கவனயீனமாக தொடர்ந்தும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் பரிசோதனையில் சிக்கிக் கொண்டுள்ளன.

வழக்கு தாக்கல்

இதனையடுத்து 3 உணவகங்களுக்கும் எதிராக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேலதிக நீதவான் மூன்று உணவகங்களுக்கும் மொத்தமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்தமையுடன் மூன்று உணவகங்களையும் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டுள்ளார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் மூன்று உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டன.