யாழ் போதனா வைத்தியசாலையில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் !

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படாமல் கடந்த இரண்டு நாட்களாக தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

இந்நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தெல்லிப்பழையில் மருத்துவ கழிவுகளை எரிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்.மாநகரசபையின் அனுமதியுடன் யாழ்.மாநகரசபையின் அனுமதியுடன் யாழ்.மாநகரை அண்டிய கோம்பையன் மணல் பகுதியில் யாழ்.மருத்துவமனை நிர்வாகத்தினால் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அது நடைமுறைப்படுத்த தயாராக இருந்தது.

எனினும் குறித்த கோம்பையன் மணல் இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிக்க அனுமதிக்க முடியாது என மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் விடயம் தடைப்பட்டது.

இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியேற்றப்படாமல் வைத்தியசாலை வளாகத்தில் தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.