யாழ். ராணுவத்தினருக்கு கனவில் வந்து சிலை வைக்க சொன்ன புத்தர் !

புத்தர் கனவில் தோன்றி தன்னை சிலை வைத்து வழிபடுமாறு கூறினார். நிலாவரி கிணற்றுக்கு அருகில் கடமையாற்றிய இராணுவத்தினர் அச்சுவேலி பொலிஸாரிடம் இதன்காரணமாக சிலையை வைத்ததாக தெரிவித்தனர்.

நிலாவாரி கிணறு அருகே அரச மரத்தடியில் இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விசாரணைகளை மேற்கொண்ட போதே இராணுவத்தினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

பொதுமக்களின் பாரிய எதிர்ப்பையும் வலிகாம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து குறித்த சிலை இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

நிலாவாரி பிரதேசத்திற்கு தொல்பொருள் திணைக்களம் உரிமை கோரும் அதே வேளையில், நிலாவாரி பிரதேசத்தை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் குறித்த சிலை இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.