யாழில் வீதிக்கு இறங்கி போராடும் நெடுந்தீவு மக்கள்!

  யாழ்ப்பாணம் -நெடுந்தீவில் ஜவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச மக்களால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிரதேச மக்களால் நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு பொலிஸாருக்கு மகஜரும் அனுப்பபட்டது. அந்த மகஜரில்,

மகஜர் கையளிப்பு

நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு காவல் நிலையத்தால் ஒவ்வொரு சமூகத்திடமும் காவல் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படல் வேண்டும்.

நெடுந்தீவு காவல் நிலையத்தால் வரையறுக்கப்பட்ட நெடுந்தீவு இடங்களை ரோந்துப் பணியினூடாக கண்காணிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும். நெடுந்தீவின் சுற்றுலா தளங்களிற்கு ஒவ்வொரு நாளும் சென்று நெடுந்தீவு காவல் நிலைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்.

அதோடு வெளியூர்களில் இருந்து வந்து நெடுந்தீவின் விடுதிகளில் தங்குபவர்கள் விடுதி உரிமையாளர்களால் பூரண ஆள் அடையாளத்திற்கு உட்படுத்தல் நெடுந்தீவு காவல் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவுக்கு உள்ளே வரும் வெளியே செல்லும் மக்களின் தரவுகளை நவீன தொழிநுட்பத்துடன் கொண்டு பயணிகளை சிரமப்படுத்தாது அதிவிரைவாக தரவுகளை இறங்குதுறையில் வைத்து சேமித்து கொள்ளும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று நெடுந்தீவில் வெளிநாட்டில் இருந்து வந்தோர் உட்ப ஐந்து வயோதிபர்கள் , கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் , சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தில் வாழும் ரகு எனும் நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.