பலாப்பழத்தால் நிகழ்ந்த கொலை சம்பவம்!

கொழும்பில் ஹோட்டலொன்றின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கல்கிஸ்சை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கொலைக்காக பயன்படுத்திய கத்தியையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி சந்தேக நபர் ஹோட்டல் உரிமையாளரிடம் பலாப்பழமொன்றை விற்பனை செய்வதற்காக வருகை தந்துள்ளார்.

அதன் விலையை 250 ரூபாவை என தெரிவித்த நிலையில் அதனை 200 ரூபாவுக்கு வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளர் பேரம் பேசியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்தே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் பின்னர் சந்தேக நபர் தப்பியோடியுள்ளார். இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் ரத்மலான பகுதியில் வைத்து நேற்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.