யாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட வர்த்தகர்

  யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் கடன் தொல்லையால்  குடும்பஸ்தர் ஒருவர்  தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவிண்டில் பகுதியில் நேற்று (29)  இந்த சம்பவம் இடம்பெற்றதாக  கூறப்படுகின்றது.  சம்பவத்தில் மரக்காலை நடத்தி வரும் ஒருவரே தனது வீட்டில் உயிரை மாய்துள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் தாக்குதல்

அதேசமயம் அவர் உயிரை மாய்த்த சமயத்தில் அவரைதேடி வீட்டிற்கு வெளியில் கடன் கொடுத்தவர்கள் சிலர் காத்து நின்றதாகவும், வர்த்தகர் உயிரை மாய்த்ததையறிந்து வீட்டிலிருந்து அழுகுரல்கள் கேட்டதையடுத்து  அவர்கள் நழுவிச் சென்றதாகவும்  கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த சில நாட்களின் முன்னரும் கடன்கொடுத்தவர்கள் மரக்காலைக்கு சென்று தலைக்கவசத்தால் வர்த்தகரை தாக்கியதாக  அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கடன் தொல்லையால் வர்த்தகர் ஏற்கெனவே ஒருமுறை தனது மரக்காலைக்குள் உயிரை மாய்க்க முயன்றபோது, மரக்காலையில் பணியாற்றியவர்கள் அவரை சமாதானப்படுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.