மட்டக்களப்பு அரச வங்கி ஒன்றில் மாயமான தங்க நகைகள் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அரச வங்கியொன்றில் நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (2) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இந்நிலையில் சந்தேக நபர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் விடயங்களை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபர்கள் மூவரையும் தொடர் விசாரணைக்காக எதிர்வரும் 16.06.2023 வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி குறித்த வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அங்கு கடமைபுரிந்த ஊழியர்கள் சிலரால் வங்கியில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி 7 இலட்சத்து 85412.50 சதம் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டிருந்ததாகவும் இச் சம்பவம் வங்கி நிர்வாகத்திற்கு தெரிய வந்தமையினையிட்டு குறித்த வங்கியின் தலைமைச் செயலகத்தினால் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இதன் பிரகாரம் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணையின் பின்னர் 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.