யாழில் பதின்ம வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்திய காதலன் கைது!

   யாழில்  15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 19 வயது  காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கடந்த வருடம் தனது காதலனான 19 வயதான இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்று இருந்தார்.

காதலனின் தாய் உட்பட ஐவர் கைது

அதனையடுத்து, மாணவியின் பெற்றோர்,  மகளை  இளைஞர் ஒருவர் கடத்தி சென்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த வேளை, இளைஞனின் தாயார் அவர்களுடன் தொடர்பில் இருப்பதனை அறிந்து இளைஞனின் தாயையும்  கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், மாணவியும், காதலனும்  விசுவமடு பகுதியில் வீடொன்றில் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், தாயார் கைது செய்யப்பட்டதை அறிந்து, இளைஞனும்,   காதலியும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர்.

மாணவி வைத்தியசாலையில் அனுமதி

அதனையடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் தங்க வீடு கொடுத்த வீட்டு உரிமையாளர், மாணவியை அழைத்து செல்ல உதவியவர்கள், இளைஞனின் தாயார் என ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.