மகளின் படிப்பிற்கு பணம் இல்லாததால் தாய் எடுத்த விபரீத முடிவு!

  தமிழகத்தில் மகனின் படிப்பு செலவுக்காக வாகனத்தின் முன் விழுந்து பெண்ணொருவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் தொடர்பாக மனதை உருக வைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 46 வயதான பாப்பாத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த மாதம் 28ம் திகதி தனியார் பேருந்து மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.

தாயின் விபரீத  முடிவு

விபத்தை அடுத்து சிசிடிவி கேமராவை பொலிஸார் ஆய்வு செய்த போது , பாப்பாத்தி வேண்டுமென்றே பேருந்து முன்னால் விழுந்து பாப்பாத்தி தற்கொலை செய்தது தெரியவந்தது.

அதன்படி பாப்பாத்தியின் மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவரது மகனுக்கு கல்லூரி கட்டணம் ரூ.45 ஆயிரம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது.

எனினும் , அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இந்நிலையில் யாரோ சிலர் தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும், மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் கூறியதை அடுத்து பாப்பாத்தி தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது