களுத்துறையில் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் பிணையில் விடுவிப்பு!

 களுத்துறையில்16 பாடசாலை மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி ஹல்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் களுத்துறை வடக்கு சுபாசாதக மாவத்தையைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியரொருவருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

பிணை நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, சந்தேகநபர் வெளிநாடு செல்வதை தடை செய்து குடிவரவு குடியகழ்வுக்கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 12 மணிக்குள் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்

மாணவிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு தனது காரில் அழைத்துச்சென்று காரில் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருந்தமையும் விசாரணையில் தெரியவந்திருந்தது.

தகவல்களை அம்பலப்படுத்திய மனைவி

அதுமட்டுமல்லாது சூம் தொழில்நுட்பம் மூலம் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த இணைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை அகற்றுமாறு அச்சுறுத்தி, அதனை தனது கைத்தொலைபேசியிலும் அவர் பதிவு செய்திருந்தார்.