பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகப் புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்கள் இலங்கையிலிருந்து படகில் புறப்பட்டு இன்று (31.07.2023) காலை தனுஷ்கோடி-அரிச்சல்முனை கடற்கரையைச் சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த மரைன் பொலிஸார், அவர்களை மீட்டு மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாகத் தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.