கனடாவிற்கு கல்வி கற்க சென்ற இந்திய மாணவருக்கு நிகழ்ந்த சோகம்!

கனடாவில், பாலம் ஒன்றின் கீழ் மோசமான சுழலில் தங்கியிருக்கும் இந்திய இளைஞர் ஒருவரைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கனடாவின் ரொரன்றோவில் காரில் பயணித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் சிலர், தங்களைப் பார்த்து கையசைக்கும் ஒரு இளைஞரைக் கண்டு காரை நிறுத்தியுள்ளனர்.

அவர், தன் தாயிடம் பேசுவதற்கு கொஞ்சம் மொபைல் தரமுடியுமா என கேட்க, அவரும் இந்தியர் எனத் தெரியவரவே, அவரிடம் மொபைலைக் கொடுத்துள்ளார் அந்த இளைஞர்களில் ஒருவரான Chirag Gondi என்னும் இளைஞர்.

பேசி முடித்ததும், உங்களை நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு காரில் அழைத்துச் சென்று விட்டுவிடுகிறோம், வாருங்கள் என அவர்கள் அழைக்க, தான் அங்கிருக்கும் ஒரு பாலத்தின் கீழ்தான் தங்கியிருப்பதாக அவர் கூற, அதிர்ச்சியடைந்துள்ளார்கள் அந்த இளைஞர்கள்.

உடனடியாக, அவரை அருகிலுள்ள தங்கும் முகாம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார்கள் அந்த இளைஞர்கள். அவர்கள் இந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட, அது வைரலாகியுள்ளது. தற்போது, பலர் அந்த மாணவருக்கு உதவமுன்வந்துள்ளனர்.

உங்களுக்கு தங்க வேறு இடமே கிடைக்கவில்லையென்றால், உள்ளூர் குருத்வாராவுக்குச் செல்லுங்கள். உங்களுக்கென ஒரு இடம் கிடைக்கும் வரை உங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என ஒருவர் கூறியுள்ளார்.

தயவு செய்து அவரைக் குறித்த விவரங்களைக் கொடுங்கள், நான் அவருக்கு தங்க இடம் கொடுக்கிறேன் என மற்றொருவரும், அவரது வாடகையைக் கொடுக்க விரும்புவதாக ஒருவரும், அவருக்கொரு மொபைல் வாங்கித்தருவதாக ஒருவரும் என அவருக்கு உதவ ஏராளமானோர் முன்வந்துள்ளனர்.

இன்னொரு பக்கமோ, கனடாவுக்குக் கல்வி கற்கச் செல்லும் மாணவ மாணவியர் சிலர் சந்திக்கும் கஷ்டங்களை இந்த வீடியோ வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.