எட்டு மாதங்களின் பின்னர் இலங்கை வந்த கோடீஸ்வர வர்த்தகரின் சடலம்!

 

இந்தோனேஷியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை கோடீஸ்வர வர்த்தகரான ஓனேஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் இலங்கை கோடீஸ்வர வர்த்தகரான ஓனேஷ் சுபசிங்க படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

ஓனேஷ் சுபசிங்க படுகொலை
இந்நிலையில் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று (03) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரின் சகோதரியான அனோஷி சுபசிங்க சகோதரனின் கொலை தொடர்பில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்தோனேசியாவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஒபெக்ஸ் ஹோல்டிங் குழுமத்தின் உரிமையாளர் ஒனேஷ் சுபசிங்க மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரது பிரேசில் மனைவி தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.