உயிர் தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவன் விழுந்து மரணம் !

நுவரெலியாவில் குளவி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவர் ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா, பம்பரகலை பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி தாக்கியதில் இருந்து தப்பிக்க மேலும் மூவருடன் ஓடும் போது குறித்த மாணவன் பாறையில் இருந்து கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் என தெரியவந்துள்ளது.

நுவரெலியா பொலிஸார் நுவரெலியா மாநகர தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் குளவி கொட்டுக்கு இலக்காகி சுருண்டு விழுந்த மாணவனை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.