‘நிம்மதியாக உட்கார்ந்து பேசவும் விடமாட்டீர்களா?’: கிழக்கு பல்கலைக்கழக காதலர்களுக்கு நேர்ந்த சம்பவம்!

கிழக்கு பல்கலைகழக மாணவனை தாக்கி விட்டு, அவரிடமிருந்து கையடக்க தொலைபேசியை பறித்து சென்ற நபரை கைது செய்ய, பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சனிக்கிழமை (19) மாலை 5 மணியளவில் வந்தாறுமூலை பகுதியில், கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் காதலர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இந்த கொள்ளைச் சம்பவம் நடந்தது.

நபர் ஒருவர், அவர்களை அணுகி, மாணவனைத் தாக்கிவிட்டு, அவரது கையில் இருந்த அப்பிள் கையடக்கத் தொலைபேசியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிசார் திருடப்பட்ட ரூ.189,000 பெறுமதியான அப்பிள் தொலைபேசியின் இருப்பிடத்தை கண்காணித்து, திருடனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

திவுலபிட்டிய, மபோதலை பகுதியைச் சேர்ந்த மாணவனின் கையடக்க தொலைபேசியே திருடப்பட்டது.