யாழில் பொலிசார் தேடி சென்ற போது விபரீத முடிவெடுத்த நபர்

  யாழில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை பொலிஸார் தேடிச்சென்றபோது , தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் தேடிச்சென்றபோது விபரீத  முடிவு

சம்பவத்தில் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த 3ஆம் திகதி காரைநகர் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றனர்.

இதன் போது சந்தேகநபர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.