அவுஸ்ரேலியாவிற்கு எதிராக வழக்கு தொடரும் பிரபல கிரிக்கெட் வீரர்

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு

வழக்கு விசாரணைகளின் போது தனுஷ்க குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

வழக்கு விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் இரவு அவர் நாடு திரும்பியிருந்தார்.

அவுஸ்திரேலியாவின் சட்ட திட்டங்களுக்கு அமைய தமக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணிடம் நஷ்ட ஈடு கோர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்,  அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக சிவில் வழக்கு ஒன்றை தொடர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் ஊடாக தமது வழக்கிற்கு செலவான பணத்தை நட்ட ஈடாக பெற்றுக்கொள்ள உத்தேசித்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண மற்றும் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனமை குறித்து வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் பயிற்சிகளுக்கு திரும்ப உள்ளதாகவும் இன்னமும் விளையாடுவதற்கு விருப்பம் உள்ளது எனவும் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

மிக நெருக்கடியான காலத்தில் தமக்கு உதவிய தாம் குற்றமற்றவர் என நம்பிக்கை கொண்டிருந்த அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.