யாழ் முக்கிய வீதியில் குப்பை கொட்டுபவர்களின் காணொளியை அம்பலப்படுத்த தயாராகும் இளையவர்கள்

யாழ் பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொட்டுவோர்களை அந்தப் பகுதியில் வதியும் இளையவர்கள் காணொளி எடுத்து சமூக வலைத் தளங்களில்  ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி வருகின்றனர்.  

யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிகள், யாழ் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றை அண்மித்த இந்தப் பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடமாகும்.

குறித்த பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொட்டுபவர்களால் அந்தப் பகுதியில் வதிபவர்களும், பல்கலைக்கழக, தொழிநுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகக் கல்லூரி மாணவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.    

வெளி இடங்களிலிருந்து வாகனங்களில் கொண்டுவந்து குப்பைகளையும், கழிவுகளையும் பலர் குறித்த வீதியில் வீசி விட்டுச் செல்வதனால் அவை வீதிக்குக் குறுக்காக விலங்குகளால் இருத்து விடப்படுவதனால் நடந்து செல்வோர் உட்படப் பலர் இடையூறுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், மனிதக் கழிவுகள் உட்பட வெறுக்கப்படத்தக்க கழிவுகளை வீசுவதனால் அவை துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடுகளை எதிர் நோக்க வேண்டி இருப்பதாகவும் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.   

இவ்வாறானவர்களை சமூக வலைத்தளங்களுக்கூடாக அம்பலப்படுத்தவுள்ளதாகத் இளையவர்கள் தெரிவிக்கின்றனர்.