இணையத்தில் வேலை தேடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணையத்தளங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாக கூறி 90 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கொழும்பு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 34 வயது கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

குறித்த நபர் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 3 வங்கிக் கணக்குகள் மற்றும் 72 இலட்சம் ரூபாய் பணம் இருப்பதாகவும் ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் நேற்றுமுன்தினம் (13.10.2023) கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அவரை எதிர்வரும் (27.10.2023) ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.