யாழில் பெண் கொலை மூவர் அதிரடி கைது!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் நெல்லியடி பொலிஸாரினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

 மூதாட்டி உயிரிழப்பில்  சந்தேகங்கள்

அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடற்கூற்று பரிசோதனையின்போது சந்தேகங்கள் இருந்தமையால் , உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டே உயிரிழந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது.

அதன் பின்னர், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் 32 மற்றும் 28 வயதுடைய தம்பதியினரையும், மூதாட்டியின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த 19 வயது யுவதியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூதாட்டியின் காணிக்குள் இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும், ஒரு வீட்டினை தம்பதியினருக்கு வாடகைக்கு வழங்கிவிட்டு மற்றைய வீட்டில் மூதாட்டி வசித்து வந்துள்ளார்.

அத்துடன், மூதாட்டியை பராமரிப்பதற்காக 19 வயது யுவதி ஒருவர் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக தங்கியிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.