இலங்கையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிப்பு!

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் சர்வதேச நீரிழிவு 14 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு  விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (14) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில்  வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார உத்தியோகத்தர்கள் பங்கு கொண்ட இப்பேரணி மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனையின் முன்ன ஆரம்பமாகி திருமலை வீதியூடாக மகாத்மா காந்தி பூங்காவை அடைந்தது.

மாவட்ட தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் உட்பட  அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பேரணியின் நிறைவில் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு உரைகளும் நடைபெற்றன.

இலங்கையில் வளர்ந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதன்போது கருத்த தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் தெரிவித்தார்.