யாழில் கன மழையால் நூற்றுக் கணக்கான மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி த.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று(14) காலை 8.30 மணி முதல் இன்று (15) காலை 8.30 மணி வரையான மழைவீழ்ச்சி பதிவை அடிப்படையாகக் கொண்டே யாழ்ப்பாணத்தில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மழை வீழ்ச்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சுவேலியில் 175.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறையில் 170.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 139.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் மீசாலையில் 133 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் தொல்புரத்தில் 118 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகி உள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் மத்தியில் 68.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் கோட்டை பகுதியில் 58.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் சாவகச்சேரியில் 34.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அம்பனில் 24.7 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நயினாதீவில் 6.8 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் நெடுந்தீவில் 2.2 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மேலும் கிளிநொச்சியில் 99.9 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் ஆனையிறவில் 56.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் அக்கராயனில் 128.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்: தீபன்

நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 குடும்பங்களை சேர்ந்த 317 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 197 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அனர்த்தம்
இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அதே பகுதியில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 36பேர் ஒரு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/167 கிராம சேவகர் பிரிவில் ஆலயம் ஒன்றிற்கு மேலே அரசமரம் ஒன்று குடைசாய்ந்ததில் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.