யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கடும் பாதுகாப்பு!

  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வீதியில் இரும்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் கைதி உயிரிழப்பு

நீதிமன்ற உத்தரவின் படி யாழ்ப்பாணம்  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் மீது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவத்தை அடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணையும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.