பிரித்தானிய பெண்ணை நாடு கடத்தும் முயற்சி நிராகரிப்பு!

பிரித்தானியப் பெண் கெய்லி பிரேசரை நாடு கடத்தும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியை கொழும்பு உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தன்னிச்சையான முறையில் தன்னை நாடு கடத்தும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.

மேலும், மேன்முறையீட்டாளர் பொருள் உண்மைகளை மறைத்து, தவறான உண்மைகளை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளார் என்று சட்டமா அதிபர் பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தார்.

இந்த நிலையிலேயே கொழும்பு உயர்நீதிமன்றம் குறித்த முறையீட்டை நிராகரித்துள்ளது.

முன்னதாக, குறித்த பிரித்தானிய பெண் 2022 இல் இலங்கையில் சுற்றுலாப் பயணியாக வந்து, காலி முகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் காணொளிகளை வெளியிட்டார்.

இதனையடுத்து குறித்த பெண்ணின், வீசா நிபந்தனைகளை மீறியதற்காக அவருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த முடிவு செய்திருந்ததுடன், 2022 ஒகஸ்ட்15 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அவருக்கு அறிவித்திருந்தது.

இருப்பினும், அவர் இன்று வரை இலங்கையில் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், நாடு கடத்தும் அதிகாரிகளின் உத்தரவையும் ரத்துச்செய்யவேண்டும் என்று கோரிவருகிறார்