யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி!

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் 1 கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த, மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினராகிய சிறிது காலத்திலேயே அவர் வெளிநாடு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து, பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடாவுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு 2022- 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக 1 கோடியே 25 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.

பலரிடம் மோசடி

எனினும் குறித்த நபரை வெளிநாடு அனுப்பாது இழுத்தடிப்பு செய்த நிலையில், சம்பந்தப்பட்டவர் அது தொடர்பில் வினவ ஆரம்பித்த போது, முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி விட்டார்.

அதுமட்டுமல்லாது சந்தேக நபர் திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாற பண மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. சந்தேக நபர் மீது மீது திருகோணமலை, மல்லாகம் நீதிமன்றங்களில் பண மோசடி வழக்குகள் நடந்து வருகிறது.

பணம் மோசடி செய்து ஆடம்பரமாக செலவு செய்வதே அவரது வழக்கம் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு சென்ற பிரதேசசபை உறுப்பினர், வெளிநாடு செல்வதற்காக கொழும்பு நோக்கி சொகுசு பேருந்தில் பயணித்தபோது யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பேருந்தை வழிமறித்த பொலிசார் சந்தேக நபரை கைது செய்ததாக கூறப்படுகின்றது.