போர் விமானங்களை வாங்கும் சிங்கபூர்!

சிங்கப்பூரின் வான்படைக்கு புதிதாக எட்டு எஃப்-35ஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பினை அவர் நேற்றைய தினம் (28) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நான்கு எஃப்-35பி ரக போர் விமானங்களை வாங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அந்த வகையைச் சேர்ந்த மேலும் எட்டு விமானங்களை வாங்கவிருப்பதாக தற்காப்பு அமைச்சு சென்ற ஆண்டு (2023) மீண்டும் அறிவித்திருந்தது.

செயற்திறன்மிக்க ஆயுதங்கள்

வெவ்வேறு ஆற்றல் படைத்த இந்த இரண்டு எஃப்-35 வகை விமானங்களும் ஆகாயப்படையின் செயற்திறனுக்கு வலு சேர்க்கும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

“மிகுந்த தாங்குதிறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எஃப்-35ஏ விமானங்கள், செயற்திறன்மிக்க ஆயுதங்களையும் சுமந்துசெல்லும் வல்லமை படைத்தவை. இவை குறுகிய தொலைவில் மேலெழும்பும், செங்குத்தாகத் தரையிறங்கும் ஆற்றல் படைத்தவை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட எஃப்-35 ரக விமானங்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விமானங்களின் விலை

இந்நிலையில் எஃப்-35ஏ விமானங்களின் விலை குறித்த விவரங்களைத் தற்காப்பு அமைச்சு இன்னும் வெளியிடவில்லை என்றாலும், அண்மைய அமெரிக்கப் புள்ளிவிவரங்களின்படி, அவை ஒவ்வொன்றும் 82.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல, எஃப்-35 பி ரக போர் விமானத்தின் விலை 109 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.