யாழ் மீனவர்களிடையே முறுகல் நிலை!

   யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரிடமும் மீன்வர்கள் முரண்பட்டுள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிசாருடனும்   முறுகல் 

உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது.

எனினும் தமது அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவரும் நிலையில், கரைவலை வாடி மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்தில் அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது. இதனியடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர்.

உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.