கனடாவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதிக் கிரியைகள் நிறைவு!

கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

கனடாவின் பௌத்த பேரவை, ஒட்டாவாவின் ஹில்டா ஜயவர்தனராமம் நன்கொடையாளர் சபை மற்றும் கனடாவில் வாழும் இலங்கையர்கள் மற்றும் கனேடிய சமூகத்தினரின் பங்களிப்புடன் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 06 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரம்
இந்த சம்பவத்தில் தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க 35 வயது, இனுக விக்கிரமசிங்க – 07 வயது, அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது ,றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது, கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள் காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதலில் தனுஷ்க விக்கிரமசிங்க உயிர் தப்பியுள்ளதுடன், அவர் குடும்பத்தினருடன் இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டுள்ளார்.

சந்தேகநபருக்கு விளக்கமறியல்
இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் ஒட்டாவாவின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரும் கொலைச் சம்பவம் எனவும், கனடாவின் தலைநகரில் ‘குறிப்பிடத்தக்க’ தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பொலிஸ் மா அதிபர் ஸ்டப்ஸ் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட 19 வயதான இலங்கை மாணவர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.