மட்டக்களப்பு விபத்தொன்றில் சிவில் சமூக செயற்ப்பாட்டாளர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பின் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து, இன்று (21.03.2024) மாலை கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளைவீதி, புலையவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சமூக செயற்பாட்டாளரான தம்பிநாயகம் சிறிபாலு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகள்

அவர் கரடியனாறு பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் மீது மோதியதையடுத்தே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.