தோல்வியில் முடிந்த சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21) தோற்கடிக்கப்பட்டது.

சற்றுமுன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில் 42 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது

மூன்று நாள் விவாதம் 

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நிறைவேற்றும் போது செயற்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மூன்று நாட்களாக நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் அனைவரும் கலந்துகொண்டு வாக்களித்ததுடன் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.