இலங்கை இந்திய பாலம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் மேம்பாலம் அமைப்பது குறித்து இந்த பயணத்தின் போது அவர் சம்பந்நதப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் கடலுக்கு மேல் 28 கிலோமீட்டர் நீளமான மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

உடன்படிக்கை

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான பயணத்தின் போது இந்த பாலத்தை அமைப்பது தொடர்பான உடன்படிக்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரை இந்த மேம்பாலத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு 

இது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 27 ஆம் மற்றுமு் 28 ஆம் திகதிகளில் அவர் குறித்த விடயம் தொடர்பான பேச்சுக்களை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முன்னெடுக்கவுள்ளார்.

இரண்டு நாடுகளினதும் பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.