ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள்

நாட்டில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமை காரணமாக ரஷ்ய குடியுரிமை பெறும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர் ஒருவர் மாதம் 3000 அமெரிக்க டொலர் (சுமார் 9 இலட்சம் இலங்கை ரூபா) சம்பளமாக பெறுவதாக இலங்கையர்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பல இராணுவத்தினர் தற்போது ரஷ்ய இராணுவத்தில் இணைவதற்கு முயற்சிப்பதாகவும் மற்றும் அவர்கள் தங்கள் குடும்பங்களின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க உக்ரைன் இராணுவத்தின் தாக்குதலில் உயிரிழக்கவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர்கள்
இதேவேளை, இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 27 வயதான நிப்புன சில்வா இந்த மாத தொடக்கத்தில் உக்ரைன் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவருடன் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 36 வயதான சேனக பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

டொனெட்ஸ்க் நகரில் உள்ள பதுங்கு குழியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது உக்ரைன் இராணுவத்தின் ஆளில்லா விமானத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக சேனக பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலினால் நிபுனாவின் மார்பு, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அவருக்கு அதிகளவு இரத்தம் வெளியேறியதாகவும் சேனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.