புங்குடுதீவு வித்யா படுகொலை சம்பவத்தில் சந்தேக நபர் மரணம்!

 யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா என்ற பாடசாலை மாணவியை கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

சம்பவத்தில் புங்குடுதீவு கைட்ஸ் பகுதியைச் சேர்ந்த புபாலசிங்கம் தவகுமார் செந்தில் (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிமோனியா நோயினால் உயிரிழப்பு

குறித்த நபர் சுகயீனம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (31) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கைதி நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

குறித்த நபரின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2015 ஆண்டில் , 18 வயதுடைய சிவலோகநாதன் வித்யா கூட்டு வன்புனர்வுக்கு உடபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .