மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு!

பாலாவி – மாம்புரி கடற்பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று அதிகாலை (02) கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த்தாக தெரிவிக்கப்படும் சொகுசு லொறியொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி கடற்படையினரால் குறித்த கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன.

மாம்புரி கடற்பிரதேசத்தில் சந்தேகத்திடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு லொறி ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, 16 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 470 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நோக்கில் குறித்த பீடி இலைகள், கடல்மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 470 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் சொகுசு லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.