யாழில் பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு!

யாழ் வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காக எடுத்த முயற்சி இன்று(05) மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அண்டிய பகுதிகளில் உள்ள பொதுமக்களின் காணிகளை நில அளவை திணைக்களம் அளவீடு செய்ய முற்பட்டதை தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையை சுற்றியுள்ள பொது மக்களின் காணிகளை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி நில அளவை திணைக்களம் இன்று காலை அளவீடு செய்ய முற்பட்ட போது பொதுமக்களின் எதிர்பைத் தொடர்ந்து அளவீடு கைவிடப்பட்டது.

இதன்போது நில அளவைத் திணைக்களத்தினருக்கு காணி உரிமையாளர்களால் தமது காணி என தெரிவித்து கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன்போது காணி உரிமையாளர்கள், பொது மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.